×

தீப ஒளித் திருநாளில் மக்களின் உள்ளங்களில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“உலகில் மண்டிக் கிடக்கும் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த தீப ஒளித் திருநாளில் சமுதாயத்தின் அங்கமாகிய மக்களின் உள்ளங்களில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்; அநீதி அகன்று நீதி நிலைக்கட்டும்; அநியாயம் அழிந்து நியாயம் நிலைநாட்டப்படட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழட்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post தீப ஒளித் திருநாளில் மக்களின் உள்ளங்களில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Dipa Ulith ,Paneer ,Selvam ,Chennai ,Diwali ,Tamil Nadu ,Paneer Selvam ,
× RELATED கோவை முன்னாள் மேயரும், 2 முறை...